Tuesday, June 16, 2009

குழந்தை சிரிப்பு



அந்த குட்டிப் பெண்ணின்
சிரிப்பில் அப்படி என்னத்தான்
இருக்கிறதோ தெரியவில்லை

கொள்ளைக் கொள்ளையாய்
அவள் வெள்ளைச் சிரிப்பில்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொள்ளையடித்துக்
கொண்டு போய்விட்டாள்

அவள் ஒவ்வொரு முறை
மலர்ந்த போதும் என் மனதில்
ஈரமாய் ஒன்றிரண்டு பனித்துளிகள்

அவள் வாய் நிறையச் சிரிக்கும்போதுதான்
மகிழ்ந்திருத்தலின் மகத்துவம் புரிகிறது

என்னச் செய்வது...? கேட்கும்போதெல்லாம்
பூ பூத்துச் சொரிய சிலருக்கு மட்டும்தான்
வாய்த்திருக்கிறது!

ஒவ்வொரு புன்னகையின்
முடிவிலும் நான்தான்
உடைந்துபோனேன்

அந்த நொடி அப்படியே
உறையாதா என்ற
எதிர்பார்ப்பிலும்...

மீண்டும் அந்த நாட்கள்
எனக்கும் வாய்க்காதா
என்ற ஏக்கத்திலும்...

- எட்வின் பிரிட்டோ

No comments:

Post a Comment